Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 14, 2019

குரூப் 4 எழுத்துத் தேர்வு: 5 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்பட குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 5 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 14) முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (www.tnpsc.gov.in) இணையதளத்தில் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 பிரிவுக்குள் வருகின்றன.
கடந்த 2017-ஆம் ஆண்டில் கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் அனைத்தும் குரூப் 4 பிரிவுக்குள் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, குரூப் 4 பிரிவில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கடந்த தேர்வு அறிவிக்கையின் போது, 9 ஆயிரத்து 351 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது.


இந்த எழுத்துத் தேர்வினை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இந்த நிலையில், குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட தேர்வு அறிவிக்கையின்படி, எழுத்துத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 14) முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 பிரிவின் கீழ் வருகின்றன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற குறிப்பிட்ட சில பணியிடங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


முழு விவரங்கள் வெளியீடு: காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வுக் கால அட்டவணை, தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய விரிவான அறிவிக்கை வெள்ளிக்கிழமை காலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.