
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - தேவையான அளவு
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு பல் - 12
பிரண்டை தோலுரித்தது - 3 கைப்பிடி
புளி - எலுமிச்சை அளவு
கருவேப்பிலை - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
தேவையான அளவு உப்பு
செய்முறை:
ஒரு கடாயில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு, சூடானவுடன் சீரகம் 2 டீஸ்பூன் போட்டு வறுத்து தனியாக எடுத்துக் வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்து, மிளகு 2 டீஸ்பூன் போட்டு வறுத்து எடுத்து, சீரகத்துடன் சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவேண்டும். மீண்டும் கடாயில் உள்ள எண்ணையுடன், கொஞ்சம் நல்லஎண்ணெய் சேர்த்து, சூடானவுடன் 12 பூண்டு பற்களை போட்டு வதக்க வேண்டும், அதனுடன் வர மிளகாய் 2 சேர்க்கவேண்டும். பூண்டு வதங்கியவுடன் தோலுரித்த 3 கைப்பிடி பிரண்டையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பச்சை நிறத்திலிருக்கும் பிரண்டை, நல்ல பொன்னிறம் வரும் வரை வதக்க வேண்டும். இதனுடன் எலுமிச்சை அளவு எடுத்து வைத்துள்ள புளியை சேர்த்து வதக்க வேண்டும். பிரண்டை பொன்னிறம் வந்தவுடன், 1 கைப்பிடி கொத்தமல்லி தழைகளை சேர்த்து வதக்க வேண்டும். கொஞ்சநேரத்தில், கருவேப்பிலை 1 கைப்பிடியை சேர்த்து வதக்கி இறக்க வேண்டும். கருவேப்பிலை மொறு மொறு என்று வரும் அளவிற்கு வதக்கக்கூடாது. சூடாகவுள்ள இந்த கலவையை ஆறவைக்க வேண்டும்.
ஆறிய பிரண்டை கலவையை, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். பாதி அரைந்தவுடன், தனியாக வைத்திருந்த வறுத்த சீரகம், மிளகை சேர்த்து அரைக்க வேண்டும். பிறகு தண்ணீர் கொஞ்சம் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவேண்டும். மீண்டும் கடாயில் நல்லஎண்ணெய் விட்டு, சூடானவுடன் மைய அரைத்த கலவையை சேர்த்து வதக்கி இறக்கவேண்டும்.
No comments:
Post a Comment