JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, November 21, 2019

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு எதிரான வழக்கு

ஐந்து மற்றும் எட்டாவது வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்தும் அரசாணைக்கு எதிரான வழக்கில், 'தன்னார்வலர்களுடன் விவாதித்து, ஆலோசனைகளை தமிழக அரசிடம் மனுதாரர் அளித்து நிவாரணம் தேடலாம்,' என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.

பட்டுக்கோட்டை பொன்னவராயன் கோட்டை ஆசிரியர் (ஓய்வு) ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு:




தமிழகத்தில் 2019-20 கல்வியாண்டு முதல் துவக்க கல்வியில் ஐந்து மற்றும் எட்டாவது வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை செப்.,13 ல் அரசாணை பிறப்பித்தது. இதனால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். பதிலாக கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தல் திறனை மேம்படுத்த வேண்டும். முதல் வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசாணை பிறப்பிக்கும் முன் கல்வியாளர் குழு அமைத்து விவாதிக்கவில்லை.




பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்துக் கோரவில்லை. அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ராஜேந்திரன் மனு செய்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு உத்தரவு: இவ்விவகாரத்தில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களுடன் விவாதித்து, உரிய ஆவணங்களுடன் ஆலோசனைகளை தமிழக அரசிடம் மனுதாரர் அளித்து நிவாரணம் தேடலாம். நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கை பைசல் செய்கிறோம் என்றனர்.