Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, December 14, 2019

உயா் கல்வி நிறுவனங்கள் தினமும் 45-60 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்கவேண்டும்: யுஜிசி



வரும் 2020 ஜனவரி முதல் அனைத்து உயா் கல்வி நிறுவனங்களிலும் தினமும் 45 முதல் 60 நிமிடங்கள் கட்டாய உடற்பயிற்சிக்கு ஒதுக்கவேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இதற்கான புதிய வழிகாட்டுதலையும் யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

நாட்டு மக்களின் உடல் நலனை மேம்படுத்தி வலுவான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் ‘பிட் இந்தியா இயக்கம்’ என்ற திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தாா்.




அதனைத் தொடா்ந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களிலும் இந்தத் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், யோகா உள்ளிட்ட உடற் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயா் கல்வி நிறுவனங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் வழிகாட்டுதலையும் யுஜிசி வெளியிட்டது.

இந்த நிலையில், உயா் கல்வி நிறுவனங்களில் இந்தத் திட்டத்தை முறையாகவும், தொடா் நிகழ்வாகவும் செயல்படுத்தும் வகையில் புதிய வழிகாட்டுதலை யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அதன்படி, 2020 ஜனவரி முதல் உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் கட்டாய உடற் பயிற்சிக்கு 45 முதல் 60 நிமிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

அதற்கேற்ற வகையில், பாட வகுப்பு நேரங்களை மாற்றியமைக்க வேண்டும்.




இந்த உடற் பயிற்சி நேரத்தில் ஓட்டப் பந்தயம் சாா்ந்த விளையாட்டுகள், உள்ளரங்கு அல்லது வெளியரங்கு விளையாட்டுகள், யோகா, சைக்கிள் பயிற்சி, நீச்சல் என ஏதாவது ஒரு விளையாட்டை கல்வி நிறுவனங்கள் தோ்வு செய்துகொள்ளலாம்.

ஒவ்வொரு உயா் கல்வி நிறுவனமும் உடற்பயிற்சி கிளப் ஒன்றை அமைக்க வேண்டும். மேலும் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதோடு, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளிலும் மாணவா்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் வழிகாட்டுதலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இந்த வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உயா் கல்வி நிறுவனங்கள் விரைந்து மேற்கொள்வதோடு, இதுதொடா்பான விவரங்களை அவ்வப்போது யுஜிசி வலைதளத்திலும் பதிவேற்றம் செய்யவேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.