Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 16, 2020

பள்ளிகளில் காலை உணவு திட்டம் வெற்றி பெற அரசு உதவ வேண்டும்: கவர்னர்


சென்னை: ''பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டம், தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக செயல்பட, அரசு உதவ வேண்டும்,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், வேண்டுகோள் விடுத்தார்.'அட்சய பாத்திரா' அறக்கட்டளை சார்பில், 24 மாநகராட்சி பள்ளிகளில், 5,785 குழந்தைகளுக்கு, காலை உணவு வழங்கப்படுகிறது.இத்திட்டம், மற்ற பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, நவீன சமையல் கூடம் அமைக்க, சென்னை, ஆயிரம்விளக்கு, கிரீம்ஸ் சாலையில் நேற்று பூமி பூஜை நடந்தது.பூமி பூஜையில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அட்சய பாத்திரா அறக்கட்டளை தலைவர் மது பண்டிட்தாசா பங்கேற்றனர்.



கவர்னர் பன்வாரிலால் புரோஹித்: குழந்தைகளுக்கு உணவு அளிப்பது, தேசத்தின் எதிர்காலத்திற்கு உணவளிப்பதற்கு சமம். ஆரோக்கியமான குழந்தைகள், படிப்பதிலும், புரிந்து கொள்வதிலும் சிறப்பாக செயல்படுவர். குழந்தைகளின் உடல் வளர்ச்சியிலும், அறிவு வளர்ச்சியிலும், சத்தான உணவு முக்கிய பங்காற்று கிறது. காலை உணவை தவிர்த்தால், தலைவலி மற்றும் வகுப்பில் கவனமின்மை ஏற்படும் என, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.எனவே, பள்ளி குழந்தைகளுக்கு, காலை உணவு அவசியம். அதை உணர்ந்தே, அட்சய பாத்திரா அறக்கட்டளை, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கி வருகிறது.சமூக நலத் திட்டங்களை துவக்குவதில், தமிழகம் முன்னணியில் உள்ளது.




அந்த வகையில், காலை உணவு திட்டம், தமிழகத்தில் செயல்படுத்தப்படுவதில் ஆச்சரியமில்லை. தமிழகம் முழுவதும், இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட, அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், தொழில் நிறுவனங்கள், இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட உதவ வேண்டும்.முதல்வர்: அட்சய பாத்திரா அறக்கட்டளை, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.இத்திட்டத்தை விரிவுப்படுத்த, சென்னை, கிரீம்ஸ் சாலையில், 20 ஆயிரம் சதுர அடி பரப்பிலும், பெரம்பூர் பாரக்ஸ் சாலையில், 35 ஆயிரம் சதுர அடி பரப்பிலும், 27 ஆயிரம் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வகையில், நவீன சமையல் கூடம் அமைக்கப்பட உள்ளது.மாநகராட்சி இடத்தில் அமைக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. குடிநீர், மின் இணைப்பு மற்றும் மின்சார கட்டணத்தை, மாநக ராட்சி செலுத்தும்.




நான் முதல்வராக பதவியேற்று, இன்று மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நாளில், இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவது மகிழ்ச்சி.துணை முதல்வர் பன்னீர்செல்வம்: பல வகையான தானங்கள் உள்ளன. அவற்றுள் சிறந்தது அன்னதானம்.உணவு உண்பதில் மட்டும் தான், 'போதும்' என்ற வார்த்தை மனதார வாயிலிருந்து வரும். பசியாறிய பின், இலையில் அமிர்தமே பரிமாறினாலும், வேண்டாம் போதும் என்று கூறி விடுவார்.இதை கருத்தில் வைத்து தான், எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தை துவக்கினார். அதை, ஜெயலலிதா விரிவுப்படுத்தினார். இதனால், மாணவர் சேர்க்கை அதிகரித்ததுடன், இடைநிற்றல் குறைந்தது.இவ்வாறு, அவர்கள் பேசினர்.