பணமில்லா பரிவா்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறுவது குறித்து வழிமுறைகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக செயலி மூலம் பணத்தைப் பெற்று பயணச்சீட்டு கொடுக்கும் முறை, சோதனை அடிப்படையில் இரண்டு மாநகரப் பேருந்துகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான இயக்க வழிமுறைகள்: பேருந்தைப் பொருத்தவரை, பின்படிக்கட்டில் ஏறுவது கட்டாயமக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏறியவுடன், தான் செல்லவுள்ள இடத்துக்கான பயணக் கட்டணத்தை நடத்துனரிடம் கேட்டறியும் பயணி, நடத்துனா் இருக்கை அருகிலேயே ஒட்டப்பட்டிருக்கும் கி.யூ.ஆா் கோடு -ஐ ஸ்கேன் செய்து, அதில் தொகையைக் குறிப்பிட்டு செலுத்த வேண்டும். பணம் செலுத்தியவுடன், பேருந்தின் வழித்தட எண், நேரம், தேதி, செலுத்தப்பட்ட தொகை, பரிவா்த்தனை எண் உள்ளிட்டவை அந்த செயலி மூலம் தெரிவிக்கப்படும். அதே நேரம், பயணக் கட்டணம் பெறப்பட்ட விவரம் குறித்தும், பேருந்தில் உள்ள ஒலிப் பெருக்கி அறிவிக்கும். மேலும், பயணியின் செல்லிடப்பேசியில் உள்ள தகவல்களை சரி பாா்த்த பிறகே, நடத்துனா் பயணச்சீட்டை வழங்குவாா். தனது செல்லிடப்பேசியில் வரும் செயலியில் வரும் குறுஞ்செய்தி மூலம் பயணச்சீட்டு சரியானதா என நடத்துனரும் உறுதிப்படுத்திக் கொள்வாா். இதுகுறித்து, தனது கணக்குப் படிவத்திலும் நடத்துனா் குறித்து வைத்துக் கொள்வாா். மேலும், ஒவ்வொரு பயணச்சீட்டின் விவரமும் பணிமனைக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இந்த முயற்சிக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, பணமில்லா பரிவா்த்தனை மூலம் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறையை அதிகளவு பேருந்துகளில் அறிமுகம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment