Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 11, 2020

சிம்ம ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - 2020


குரு, சனிப் பெயர்ச்சியை தொடர்ந்து மற்றொரு முக்கிய கிரகப் பெயர்ச்சியான ராகு - கேது பெயர்ச்சி 2020-இல் செப்டம்பர் மாதத்தில் நிகழ உள்ளது.

சாயா கிரகங்களான ராகு - கேது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 23ம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்டம்பர் 1ம் தேதியும் பெயர்ச்சியாகிறார். ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.

சிம்ம ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார்.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

எதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்று விரும்புவீர்கள். பழமையையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பீர்கள். முன்னோர்களின் ஆசீர்வாதங்களை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

கிரகநிலை:

லாப ஸ்தானத்தில் இருந்த ராகு தொழில் ஸ்தானத்திற்கும், பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த கேது சுக ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள்.





இந்த ராகு கேது பெயர்ச்சியால், கடந்த காலங்களில் இருந்து வந்த சிரமம் அனைத்தும் அடியோடு நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கான புதிய வழி உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தினர் தேவை அனைத்தும் நிறைவேறும். உங்களைப்புறக்கணித்த சொந்தபந்தம், நண்பர்கள் வலிய வந்து உறவு கொண்டாடுவர்.

மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். எந்தச் செயலையும் தைரியத்துடன் அணுகுவீர்கள். தம்பி, தங்கையின் சுபநிகழ்ச்சிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தில் விரும்பிய மாற்றத்தை தாராளச் செலவில் நிறைவேற்றுவீர்கள். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். புத்திரர் நன்கு படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பர். வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் பெறுவர். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிதாகச் சொத்து வாங்கும் யோகமுண்டு.

உடல் ஆரோக்கியத்துடன் திகழும். மூத்த சகோதரர்கள் முக்கிய தருணங்களில் தகுந்த ஆலோசனை கூறி வழிநடத்துவர். குடும்ப ஒற்றுமை சிறந்தோங்கும். திருமண வயதினருக்கு திருமணம் விரைவில் கைகூடும். திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். நண்பர்கள் உதவிகள் செய்வர். எதை பேசினாலும் அவமானம், எதை செய்தாலும் தலைகுனிவு என இருந்து வந்த நிலை மாறும். உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிக்கும் நேரம் வந்து விட்டது. உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள்.

சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும் நேரமிது. எனவே எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை.

பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம். சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

தொழிலதிபர்கள் தொழிலில் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். எதிர்கால தேவை கருதி சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். நவீன எந்திரங்களின் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கணிசமாக அளவில் கையிருப்பு உயரும்.
வெளியூர் பயணத்தை லாபநோக்கில் நடத்தி வெற்றி காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் திறமையை வெளிப்படுத்துவர். நிர்வாகத்தினரின் ஆதரவால் பதவி உயர்வு, பாராட்டு கிடைக்கும். பணிச்சுமையில் இருந்து விடுபட்டு நிம்மதி காண்பர்.

அரசியல்வாதிகள் மற்றும் சமூகநல சேவகர்களுக்கு இதுநாள்வரை செய்து வந்த சமூகப்பணிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு தாமாக வந்து சேரும். ஆதரவாளர் மத்தியில் செல்வாக்கு கூடும். அதி காரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல் பணிக்கு புத்திரர்களாலான உதவிகளைச் செய்வர்.

கலைத்துறையில் உள்ளவர்கள் தொல்லைகள் கொடுத்தவர்கள் ஒதுங்கி செல்வர். வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று பணிகளை கவனிக்க வேண்டி வரும்.

பெண்களுக்கு எதிரிகள் தாமாக விலகிச் செல்வர். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும் . வழக்குவிவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

மாணவர்கள் அக்கறையுடன் படித்து கல்விவளர்ச்சி காண்பர். சக மாணவர்கள் மத்தியில் நற்பெயர் உருவாகும். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். படிப்பு முடித்துவிட்டு, வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

மகம்:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன் யோசிப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும் வீண் ஆசைகள் மனதில் தோன்றும்.

பூரம்:

இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.

உத்திரம் - 1:

இந்த ராகு கேது பெயர்ச்சி குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 4

மலர்பரிகாரம்: வில்வ இலை மற்றும் மல்லிகை மலர்களை சிவனுக்கு அர்பணித்து வணங்க வேண்டும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் நமசிவாய நம: என்று தினமும் 11 முறை கூறவும்

No comments:

Post a Comment