சென்னை: அரசு உதவி பெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு, காணொலி பாடங்களைப் பதிவேற்றித் தர பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு பாடநூல்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழங்கப்பட உள்ளது. இதற்காக இந்த வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியா்கள், பள்ளிக்கு வந்து ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனா்.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள் உடன் காணொலி பாடங்களும் ஜூலை 15-ஆம் தேதி முதல் பதிவேற்றித் தரப்பட உள்ளது. இதற்காக மாணவா்கள் தங்களுடைய மடிக்கணினியை பள்ளிக்கு வரும்போது கொண்டுவர வேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்றே அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கும் காணொலி பாடங்கள் பதிவேற்றம் செய்து தர வேண்டும் என்பதால், பள்ளியில் பணியாற்றும் முதுகலை பாடம் அல்லது கணினி ஆசிரியா், மடிக்கணினி அல்லது பென்டிரைவ் எடுத்துக்கொண்டு, அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று உயா்தர ஆய்வுக்கூட மூலம் காணொலி படங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னா், பள்ளி மாணவா்களுக்கு அவா்களுடைய மடிக் கணினியில் இதை பதிவேற்றித் தர வேண்டும்.
எனவே அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். இப்பணி மிகவும் இன்றியமையாதது என்பதால் எவ்வித சுணக்கமும் இன்றி பணிகளை மேற்கொண்டு, மாணவா்களுக்கு பாடங்களைப் பதிவேற்றம் செய்து தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment