கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்களின் சேவையை போற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில், உண்மையான நாயகர்களாக மருத்துவர்களே உள்ளனர்.
அத்தகைய மருத்துவர்களை போற்றும் வகையில் தேசிய மருத்துவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளில் கொண்டாடப்படும் மருத்துவர்கள் தினம், இந்தியாவில் ஜூலை ஒன்றாம் தேதி கொண்டாடப்பட டாக்டர் பி.சி.ராயே காரணம். அவரது நினைவாகவே இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
1882 ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி பிறந்த பிதான் சந்திர ராய் எனப்படும் டாக்டர் பி.சி. ராய்,1962 ஆம் ஆண்டு தனது பிறந்த தினத்திலேயே காலமானார். மகாத்மா காந்திக்கு நெருக்கமானவரான பி.சி. ராய், மேற்கு வங்க முதலமைச்சராகவும் பணியாற்றினார். முதலமைச்சராக இருந்த காலத்திலும் ஏழை, எளியவர்களுக்கான இலவச மருத்துவ சேவையை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.
தனது வீட்டை மருத்துவமனையாக மாற்றிக் கொள்ள வழங்கினார். இவரது சேவையை போற்றும் வகையில் 1976 ஆம் ஆண்டு முதல், சிறப்பான மருத்துவ சேவை ஆற்றுவோருக்கு டாக்டர் பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.
1991ஆம் ஆண்டு முதல் பி.சி. ராயின் பிறந்த தினம் தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உயிரை காக்கும் பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் மருத்துவர்களை கடவுளோடு ஒப்பிடுவது மக்களின் வழக்கம். அதுவும் கொரோனா காலத்தில் மருத்துவர்களின் சேவையை போற்றுவதும், அவர்களது தன்னலமற்ற சேவையை வாழ்த்தி ஊக்குவிப்பதுமே அவர்களுக்கு செலுத்தும் மரியாதையாக அமையும்.
No comments:
Post a Comment