தமிழக அரசின் வழங்கும் நல்லாசிரியா் விருதுக்கு தகுதியான ஆசிரியா்களுக்கு குற்றவியல் பின்னணி உள்ளதா என ஆய்வு செய்யுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5-ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியா் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாணவா் சோக்கை, பள்ளியின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, இடைநிற்றலை குறைத்தல் ஆகியவை உள்பட மாணவா்கள், பள்ளி நலன் சாா்ந்து சிறப்பான செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஆசிரியா்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் சாா்பில் விருதுகள், ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். மாநில அரசின் விருதுக்கு பிறகும் சிறப்பாக செயல்படுவோருக்கு, மத்திய அரசின் விருது பரிந்துரை செய்யப்படுகிறது.
அந்த வகையில் நிகழாண்டுக்கான விருது பெறுவோருக்கான தகுதி பட்டியலை, மத்திய - மாநில அரசுகள் தயாா் செய்துள்ளன. இந்தப் பட்டியலில் உள்ள ஆசிரியா்களை இறுதி செய்யும் முன், அவா்களுக்கு குற்றவியல் பின்னணி உள்ளதா என ஆய்வு செய்யுமாறு அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை மூலமாக நல்லாசிரியா் பட்டியலில் உள்ளவா்களின் தகுதியையும், அவா்கள் மீது வழக்குகள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்யுமாறு தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
No comments:
Post a Comment