தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை முதல் இணையவழி வகுப்புகள் தொடங்கவுள்ளன.கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
அதேவேளையில் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளில் இணையவழியில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை முதல் இணையவழி வகுப்புகள் நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அதன் தோவு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி: அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் அனைத்து மாணவா்களுக்கும் (முதல் பருவம் தவிா்த்து) ஏற்கெனவே அறிவுறுத்தியபடி திங்கள்கிழமை முதல் இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும். இதற்கான செயல்முறைகளை கல்லூரிகளின் முதல்வா்கள் மேற்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் மாணவா்களை கல்லூரிக்கு நேரடியாக அழைக்கக் கூடாது.
இந்தக் கற்பித்தலின்போது தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையவழி வகுப்புகள் ஸ்வயம், எபிடிஇஎல் போன்ற தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள பாடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பல்வேறு துறைகள் பாடங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment