ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,
இந்தியத் திருநாட்டின் 74-வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர். இந்த ஆண்டு கரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கரோனா தொற்றுப் பரவலை தவிர்க்கும் விதமாகவும், மாவட்டந்தோறும் பத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment