Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 27, 2020

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவு தொடக்கம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகக் கணினிப் பயன்பாட்டியல் துறையின் கீழ், எம்.எஸ்சி. சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்பின் அறிமுக விழா இணையதளம் வழியாக இன்று நடைபெற்றது. துணைவேந்தர் பெ.காளிராஜ் தலைமை வகித்தார். துறைத்தலைவர் டி.தேவி வரவேற்றார்.

இந்திய பிளாக் செயின் அமைப்பின் தலைவர் ஜெ.ஏ.சவுத்ரி, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.அருளரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். ஹைதராபாத் சிஎஸ்சிசி ஆய்வகத் தலைமைச் செயல் அலுவலர் சந்திரசேகர ரெட்டி, சைபர் செக்யூரிட்டி படிப்புக்கான வாய்ப்புகள் குறித்து உரையாற்றினார்.

நிகழ்வில் துணைவேந்தர் பெ.காளிராஜ் பேசும்போது, ''சைபர் செக்யூரிட்டி துறை, நான்காம் தொழிற்புரட்சியின் முக்கியக் கருவிகளில் ஒன்றாகும். வேகமாக மாறி வரும் நிச்சயமற்ற, கடினமான, தெளிவற்ற தற்காலச் சூழ்நிலைகளைக் சமாளிப்பதற்காக இத்தகைய திறன் மேம்பாட்டுக் கல்வியை மாணவர்களுக்குக் கற்பிப்பது இன்றியமையாதது.

தொழில்துறை வளர்ந்து நிற்கும் இத்தகைய காலகட்டத்தில் இந்தப் படிப்பானது மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்பு குறித்துப் பயிற்சி அளிப்பதால், எதிர்காலத்தில் இணையக் குற்றங்களையும் கட்டுப்படுத்த முடியும்'' என்றார்.

எம்.எஸ்சி. சைபர் செக்யூரிட்டி பாடப்பிரிவில் சேர விரும்புபவர்கள் http://admissions.b-u.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 0422-2428360, 2428357 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment