Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 23, 2020

சனிப் பெயர்ச்சி பலன்கள் - தனுசு

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

தனகாரகன் குருவை நாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே நீங்கள் எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ளவர். நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர். உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடைய விரும்புபவர்கள். குறிக்கோளுடன் வாழ்ந்து வாழ்க்கையை எடுத்துக்காட்டாக வாழுபவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி:





கிரகநிலை:

உங்கள் ராசியான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், தற்பொழுது தனவாக்கு குடும்ப ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய சனி பகவான் தனது மூன்றாம் பார்வையாக உங்களுடைய சுக ஸ்தானம் - ஏழாம் பார்வையாக உங்களுடைய அஷ்டம ஆயுள் ஸ்தானம் - பத்தாம் பார்வையாக உங்களுடைய லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:

குரு பகவான் தனவாக்கு குடும்ப ராசியான மகர ராசியில் இருக்கிறார்.

ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திலும் - கேது பகவான் அயன சயன போக விரைய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.


இந்த சனிப் பெயர்ச்சி உங்களை எதிலும் நிதானமாகவும், அளவெடுத்துச் சிறப்பாகவும் செயல்பட வைக்கும். இதனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள், சிரமமில்லாமல் கை வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம், எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும். தேக ஆரோக்யம் சீராக இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும்.

வெளிநாட்டிலிருந்து வரும் நல்ல செய்திகள் உங்களின் செவிகளைக் குளிர்விக்கும்; ஆதாயமும் நல்கும். உங்களின் சுய முயற்சியின் அடிப்படையில் செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள். உங்களால் சகோதர, சகோதரிகளுக்கும் நன்மை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களின் கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளில் இருந்தும், வழக்குகளில் இருந்தும் "குற்றமற்றவர்' என்று நிரூபிக்கப்பட்டு விடுபடுவீர்கள்; அதற்கான இழப்பீடுகளும் கிடைக்கும். மற்றபடி அவ்வப்போது ஏற்படும் மனச் சோர்வை நீக்கிக் கொள்ள, "நம:சிவாய' என்ற ஐந்தெழுத்தை ஓதவும்.

எதிர்பாராத விதத்தில் தீயவர்களின் தொடர்பும் ஏற்படும். இதற்காக அஞ்சத் தேவையில்லை. சிவபெருமான் துணையினால் தீமைகளிலிருந்தும் தீயவர்களிடமிருந்தும் எளிதில் மீளலாம். இதற்கான தெளிவை, "நம: சிவாய' ஜபம் தருவது நிச்சயம். நீங்கள் ஓய்வெடுக்காமல் உழைத்துக்கொண்டே இருப்பீர்கள். அதனால் நற்பலன்களும் உள்ளன. செய்தொழிலில் தினமும் வருமானம் வந்துகொண்டே இருக்கும்.

புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் உழைப்புக்கு மேல் இரு மடங்கு வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களைத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் அளவிற்கு உயர்வீர்கள். கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகள் புரிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். செல்வத்தோடு செல்வாக்கும் உயரும். எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும், நடையில் கம்பீரமும் ஏற்படும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்திச் செய்வீர்கள்.

உத்யோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.

அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்துவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.

பெண்மணிகள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள்.

மாணவமணிகள், படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்; எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டுகளில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பெற்றோர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பதால் முயற்சிகளைத் தீவிரப்படுத்தலாம்.

மூலம்:

இந்த சனிப் பெயர்ச்சியால் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.

பூராடம்:

இந்த சனி கிரகத்தின் மாறுதலால் மனதில் தைரியம் பிறக்கும். வாக்குவன்மையால் ஆதாயம் அடைவீர்கள். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த சனியின் மாற்றத்தால் தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

பரிகாரம்: தினமும் நந்தியம்பெருமானை வணங்கி வர அரசாங்க அனுகூலம் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் சத்குருவே நம" என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு

ஆக்கம்: ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

No comments:

Post a Comment