Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 1, 2020

தாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை

'பள்ளிகளை திறந்து பாடம் நடத்துவதற்கு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் மற்றும் பள்ளி கல்வி அமைச்சருக்கு, தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலர் நந்தகுமார் அனுப்பியுள்ள மனு விபரம்: கொரோனா தொற்று பரவியதால், 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை; 

மாணவர்களுக்கு பாடங்கள் சரியாக நடத்தப்படவில்லை.உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், நர்சரி, பிரைமரி பள்ளிகளில், பலர் கல்வி கட்டணம் செலுத்தவில்லை; மெட்ரிக் பள்ளிகளில், 80 சதவீதம் பேர் கட்டவில்லை. இதனால், ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது; கிராமங்களில் பலர், தினக்கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது.

ஏழை, கிராமப்புற மாணவர்கள் இணையதள வசதி இல்லாமல், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவில்லை. பல மாணவர்கள் படிப்பை மறக்கும் சூழல் உள்ளது. கல்வி கட்டமைப்பு சீரழிந்து விட்டால், நாடும் சீரழிந்து விடும். அதுபோன்ற தவறுகள், தங்கள் ஆட்சியில் நடந்து விடக்கூடாது. பல மாநிலங்களில், பல நாடுகளில், பள்ளிகள் திறந்து கற்றல், கற்பித்தல் பணிகள் சிறப்பாக நடக்கின்றன.

எனவே, அரசின் அனைத்து விதிகளையும் பின்பற்றி, முக கவசம் அணிந்தவாறு, பள்ளிகளை திறந்து வகுப்புகள் நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.தனியார் பள்ளிகளில், 50 சதவீத மாணவர்கள், புத்தகம் வாங்காமல் உள்ளனர். அவர்களுக்கு, அரசின் சார்பில் இலவச புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் இரண்டாவது கொரோனா அலை இல்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்து உள்ளார். எனவே, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று, பள்ளிகளை திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment