Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 26, 2020

சனிப் பெயர்ச்சி பலன்கள் - மீனம்

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குலகாரகன் குருவை அதிபதியாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே நீங்கள் எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாதவர்கள். நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள். இனிய வார்த்தைகள் இரும்புக்கதவையும் திறந்து விடும் என்று உணர்ந்த நீங்கள் அன்பும் அணுகுமுறையும் கொண்டவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி:





கிரகநிலை:

உங்கள் ராசிக்கு தொழில் கர்ம ஜீவன ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், தற்பொழுது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய சனி பகவான் தனது மூன்றாம் பார்வையாக உங்களுடைய ராசி - ஏழாம் பார்வையாக உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - பத்தாம் பார்வையாக உங்களுடைய அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

மற்ற கிரகங்களின் கிரகநிலை:

குரு பகவான் லாப ஸ்தானமான மகர ராசியில் இருக்கிறார்.
ராகு பகவான் தைரிய ஸ்தானத்திலும் - கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.

இந்த சனி பெயர்ச்சியால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். அதில் உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள். மன உறுதி உண்டாகும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். ஏற்றுமதி - இறக்குமதி

வியாபாரங்கள் சூடுபிடிக்கும். தூர தேசத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களைச் செய்வீர்கள். சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்து, நட்பைத் தக்க வைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும். பெற்றோர் மற்றும் நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மன வருத்தங்களை முற்றிலும் நீக்குவார். குறைந்த அளவு முதலீட்டிலும் அதிக லாபத்தை அள்ளுவீர்கள். எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது.

உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். சென்ற இடத்திலெல்லாம் பிரச்சினையை சந்தித்தவர்கள்கூட இந்தக் காலகட்டத்தில் விரும்பி வரவேற்கப்படுவார்கள். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும். "என்ன நடக்குமோ?' என்று பயந்த விஷயங்கள்கூட மகிழ்ச்சிகரமாக முடிவடையும்.

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், மரியாதைக்குரிய தொலைவில் இருந்து பழகுவது நல்லது. சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள் உண்டாகாது.

அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலும் உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதேநேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்:

இந்த பெயர்ச்சியால் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கைத் துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள்.

உத்திரட்டாதி:

இந்த சனிப் பெயர்ச்சியால் உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப் பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன்வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.

ரேவதி:

இந்த சனி பெயர்ச்சியால் குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக்கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, மேற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

பரிகாரம்: தினமும் சித்தர்களின் ஜீவசமாதிக்கு சென்றுவர எடுத்த முயற்சிகள் கை கொடுக்கும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் ஷம் ஷண்முகாய நம:" என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்

ஆக்கம்: ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

1 comment: