'கொரோனா' தடுப்பூசி போடுவதாக கூறி, ஆதார் எண் மற்றும் ஓ.டி.பி., எண்ணை 'கறக்கும்' மோசடி ஆசாமிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தினர்.திருப்பூர் எஸ்.பி., திஷா மிட்டல் உத்தரவின்பேரில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று, 'சைபர் கிரைம்' குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
குற்றவியல் பிரிவு இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், எஸ்.ஐ., காமராஜ் ஆகியோர், பேசியதாவது:'மொபைல்' டவர் அமைக்க, வாடகைக்கு இடம் தேவை, நிதி பரிவர்த்தனைக்கு ஓ.டி.பி., எண், வேலை வாய்ப்பு மோசடி, பரிசு கிடைத்திருப்பதாக கூறுதல், 'போட்டோ மற்றும் மின்னஞ்சல் மூலம், சுங்கவரி மற்றும் உடனடி கடன் மோசடி என, இணையதளம் மற்றும் 'மொபைல்' போன் மூலம், பல்வேறு முறைகேடு நடக்கிறது.
பொதுமக்கள், தங்களிடம் கேட்கும் தகவல்களை கூறினால், அவர்களை ஏமாற்றி பணத்தை ஏமாற்றிவிடுவர். இதன் தொடர்ச்சியாக, கொரோனா தடுப்பூசி மோசடியும் தற்போது நடக்கிறது. ஆதார் எண், ஓ.டி.பி., கூறினால், இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று கூறுவர்; யாரும் ஏமாந்துவிடாதீர்கள்.யார் கேட்டாலும், ஆதார் எண், பான்கார்டு எண், ஓ.டி.பி., எண், ஏ.டி.எம்., கார்டு எண்ணை பகிரக்கூடாது.
பொதுவான 'வை -பை'யை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏ.டி.எம்., மையத்தில், 'ஸ்கிம்மர்' கருவி உள்ளதா என்பதை ஒருமுறை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.ஓட்டல்களில் சாப்பிட்டுவிட்டு, பணம் செலுத்த, அங்குள்ள ஊழியரிடம், ஏ.டி.எம்., கார்டை கொடுத்து ஏமாற வேண்டாம். மகளிர், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவிகள், தங்கள்போட்டோக்களை, 'வாட்ஸ்அப்', 'பேஸ்புக்', 'இன்ஸ்ட்ராகிராம்' மூலம் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம்.
போட்டோவை தவறாக சித்தரிக்கும் வாய்ப்புள்ளது; கவனமாக இருக்க வேண்டும்.இதுபோன்ற, 'சைபர் கிரைம்' குற்றங்களால் பாதிக்கப்பட்டால், உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்ய வேண்டும். http://cybercrime.gov.in என்ற முகவரியில், தேசிய சைபர் குற்ற போர்ட்டலில் புகார் செய்யலாம்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.
No comments:
Post a Comment