மர வகையை சார்ந்த பலா வெப்பநாடுகளில் நன்கு வளரும். அதிலும் கேரளா, தமிழகம், கர்நாடகம், கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தான் பலா அதிகமாக விளைகிறது.
கிழக்கு ஆசிய நாடுகளான இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளிலும் பலா மரங்கள் அதிகம் உள்ளன.
பலாப்பழத்தை பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கின்றோம். ஆனால் பலா காயை பற்றி அவ்வளவு விழிப்புணர்வு இல்லை. பலா பிஞ்சு மற்றும் இளம் காய் சிறந்த காய்கறி உணவாக பயன்படக்கூடியது. அதில் பல வகையான அரிய சத்துக்கள் நிறைந்துள்ளது.
இலங்கையில் பெரும்பாலானோர் பலாக்காய் உணவுகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அரிசி உணவுக்கு இணையான அளவு அதில் மாவு சத்து உள்ளதால் பலா மரத்தை அரிசி மரம் என்றும் அழைக்கின்றனர்.
ஒரு காலத்தில் வங்காளதேசத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது பலாக்காய் உணவுகளை தான் உண்டு ஊட்டச்சத்து குறைபாட்டை மக்கள் ஈடு செய்தார்கள். இதனால் இது ஏழைகளின் காய் என அந்நாட்டில் கொண்டாடப்படுகிறது.
அங்கெல்லாம் என்ன நமது அண்டை மாநிலமான கேரளாவில் மூன்றாயிரம் ஆண்டுகளாக பலாக்காயை உணவில் பயன்படுத்தி வருகிறார்கள்.
போர்ச்சுகீசியர்கள் ஆதிக்கத்திற்கு முன்பு வரை அரிசி உணவுகளுக்கு இணையான பலாக்காய் உணவுகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் போர்ச்சுகீசியர்களின் வருகைக்கு பின்னர் மரவள்ளிக்கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டதால் பலாக்காயின் பயன்பாடு பெருமளவில் குறைந்துவிட்டது.
பலாக்காயில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்புசத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் உயர்தரமான மாவுச் சத்து மற்றும் நார்ச் சத்தும் உள்ளது. மேலும் சபோனின், ஐசொபிளாவின் மற்றும் லிக்கினேஸ் போன்ற தாவர ஊட்டசத்துகள் அதில் உள்ளன. இதனால் பலாக்காய் சிறந்த ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகிறது.
பலாக்காயில் உள்ள ஐக்சுலின் என்ற சத்து, நம்முடைய உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பலாக்காயில் 60 சதவீதம் நீரில் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது.
நீரில் கரைய கூடிய பெக்டின் என்ற ஒரு வகை நார்ச்சத்தும் ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்கின்றது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.
பலாப்பிஞ்சுக்கு நமது உடலிலுள்ள பித்தத்தை நீக்கும் சக்தி இருக்கிறது. இதற்கு ஆண்மையை அதிகரிக்கும் தன்மையும் உள்ளது. தாகம்போம் வந்த பித்தஞ் சாந்தமாம் ஆடவர்க்கும் போகம் மிகப் பொழியும் பொய்யன்றோ என சித்த மருத்துவ பாடலில் அதன் சிறப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
பலாக்காய் உணவுகளுக்கு தாய்ப்பாலை அதிகரிக்கும் சக்தி உள்ளது. பலாக்காயிலுள்ள மாவுச் சத்தும், அதன் நார் பொருட்களும் உடலில் சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும்.
பலாக்காய் உணவுகளை உட்கொண்ட முப்பது நிமிடங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
No comments:
Post a Comment