தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மதக்கூட்டங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள், பேருந்துகளில் நின்று பயணம் செய்ய தடை, உணவகங்கள், டீக்கடைகள், வணிக வளாகங்களில் 50 சதவீத அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கடந்த 10-ந்தேதி முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கு கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு நேர ஊடங்கு மட்டுமின்றி ஜிம், பூங்காக்களை முழுமையாக மூடுவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment