Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 22, 2021

தமிழகத்தில் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு - முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு

தமிழகத்தில் வருகின்ற 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு முடியவுள்ள நிலையில் சென்னை, தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கட்டுப்பாடுகள் விலக்கு அளிப்பது தொடர்பாகவும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

முதல்வரின் மருத்துவ நிபுணர் குழு ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஐ.சி.எம்.ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், அருண்குமார் உள்ளிட்ட 19பேர் கொண்ட குழு நேரிடையாகவும், காணொலி காட்சி வாயிலாகவும் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தமிழகத்தில் மேலும் 2 வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று 35,000-ஐ கடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 500 நெருங்கி உள்ளது. 

இதனால் ஊரடங்கை நீட்டிப்பதால் கொரோனா தொற்று குறைய நேரிடலாம் என்று மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 13 கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவக் குழு பரிந்துரைத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கினை அமல்படுத்த வேண்டிய நிலைக்கு அரசு வந்திருக்கிறது. மதியம் 1 மணிக்குள் இதற்கான ஆணையை பிறப்பிக்க வேண்டுமென்பதால் எம்.எல்.ஏ-க்கள் தங்களது கருத்தினை விரைந்து வெளிப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

கடந்த ஒரு வருடத்தில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பணிச்சுமை காரணமாக மனஅழுத்தத்தில் உள்ளனர். அவர்களின் மனஅழுத்தத்தை போக்க வேண்டியது நமது கடமையாகும். 

மாவட்டங்களில் பலர் ஊரடங்கினை விதிகளை மீறி சுற்றி திரிகின்றனர். இதனால் ஊரடங்கினை கடுமையாக்க வேண்டுமென்பதே பலரின் கருத்தாக உள்ளது. தளர்வுகளற்ற ஊரடங்கே கொரோனா தொற்றை குறைக்கும் என்பதால் அதனை செயல்படுத்த அரசு முன்வந்துள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment