12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், இறுதி முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட 13 சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பிரதிநிதிகள், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால் பாஜக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிபாரதம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பொதுத்தேர்வை நடத்த வேண்டாம் என்று கருத்து தெரிவித்தன. பெரும்பான்மை கட்சிகளின் நிலைப்பாட்டை ஏற்பதாக அதிமுக தெரிவித்துள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆலோசனை கூட்டத்தில் கேட்கப்பட்ட கருத்துக்களை முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளதாகவும், தேர்வு நடத்துவது குறித்து இறுதி முடிவை முதலமைச்சரே அறிவிப்பார் என்றும் கூறினார். மாலை 5:30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். இதையடுத்து பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment