Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, July 12, 2021

அரசு மாணவர்களை கைவிட்டதாக நினைத்துவிடக்கூடாது என்பதால் நீட் பயிற்சி - அமைச்சர் விளக்கம்.!

நீட் தேர்வை இரத்து செய்ய தமிழக அரசு தொடர்ந்து பாடுபட்டாலும், எதோ ஒரு சூழ்நிலையில் தேர்வு உறுதியாகி அரசு மாணவர்களை கைவிட்டு விட்டதாக நினைத்துவிடக்கூடாது என்பதால் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என்றும், மாணவர்கள் நாளை மாலை 5 மணிமுதல் NTA-வின் இணையப்பக்கமான https://nta.ac.in/ என்ற பக்கத்திற்கு சென்று மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நீட் தேர்வுக்கு எதிராக சட்டரீதியான உறுதியான நிலைப்பட்ட எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கடந்த 2006 ஆம் வருடத்தில் இதனைப்போன்ற நுழைவுத்தேர்வு வருகையில், அன்றைய முதல்வர் கருணாநிதி நீதியரசர் தலைமையில் குழுவை அமைத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தில் நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு பெற்றார்.

தற்போதையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் நீதியரசர் தலைமையில் குழுவை அமைத்து இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளை நீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் பாஜக தனது விஷமத்தை நீட் விவகாரத்தில் செய்துள்ளது. மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் நீட் தேர்வு பயிற்சிகள் தொடர்ந்து வருகிறது. மாணவர்கள் படிக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமும், அனைவரின் விருப்பமும்.

நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு, அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில் எதோ ஒரு இடத்தில் நமக்கு எதிரான தீர்ப்புகள் வரும் பட்சத்தில், மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகி இருக்கமாட்டார்கள். இதனால் சில அசம்பாவிதங்கள் நேர்ந்தால் பெரும் சோகமே நமக்கு மிஞ்சும். அதனால் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிகள் தொடர்ந்து வருகிறது.

மாணவர்கள் படிப்பதில் எந்த தவறும் இல்லை. எதோ ஒரு சூழ்நிலையில் அரசும் நம்மை கைவிட்டது என்று தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் முடிவு செய்துவிடக்கூடாது. இதனாலேயே மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சிகள் தொடர்ந்து வருகிறது. மாணவர்கள் படிப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை " என்று தெரிவித்தார்.

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment