Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, August 6, 2021

கரோனா காலத்தில் பணியாற்றியோருக்கு மட்டுமே விருது: மாநில நல்லாசிரியர் விருதுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க, கரோனா காலத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

2020-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஏற்கெனவே விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தமிழகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று அழைக்கப்படும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பம் பெறப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

’’1. அனைத்து வகை ஆசிரியர்களும்‌ குறைந்தபட்சம்‌ 5 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்‌.

2. மாநிலப் பாடத் திட்டத்தின்‌கீழ்‌ செயல்படும்‌ அரசுப்‌ பள்ளிகள்‌ / ஆதிதிராவிட / பழங்குடியினர்‌ நலத்துறை / பிற்பட்டோர்‌ நலத்துறை / சமூக பாதுகாப்புத்‌ துறை / நிதி உதவி பெறும்‌ பள்ளிகள்‌ / ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள்‌ மற்றும்‌ சுயநிதி மெட்ரிக்‌ பள்ளிகள்‌ ஆகிய மேலாண்மைகளின்‌ கீழ்‌ செயல்படும்‌ தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ அனைத்துவகை ஆசிரியர்களும்‌ விருதிற்குத்‌ தகுதியுடையவர்கள்‌.

3. இவ்விருது வகுப்பறையில்‌ கற்பித்தல்‌ பணியில்‌ ஈடுபடும்‌ ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்‌. அலுவலகங்களில்‌ நிர்வாகப் பணி மேற்கொள்ளும்‌ ஆசிரியர்கள்‌ விண்ணப்பிக்கக் கூடாது.

4. கல்வியாண்டில்‌ செப்டம்பர்‌ 30ஆம்‌ தேதிக்கு முன்‌ வயது முதிர்வின்‌ காரணமாக ஓய்வுபெற்ற ஆசிரியர்களைப்‌ பரிந்துரை செய்யக் கூடாது. ஆசிரியர்கள்‌ கல்வியாண்டில்‌ குறைந்தது 4 மாதங்கள்‌ (செப்டம்பர்‌ 30ஆம்‌ தேதி வரை) பணிபுரிந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌. (மறுநியமன காலத்தைக்‌ கணக்கில்‌ எடுத்துக்‌கொள்ளக் கூடாது).

5. பரிந்துரைக்கப்படும்‌ ஆசிரியர்கள்‌ எவ்விதக்‌ குற்றச்சாட்டிற்சூம்‌, ஒழுங்கு நடவடிக்கைக்கும்‌ உட்படாதவராகவும்‌, பொதுவாழ்வில்‌ தூய்மையானவராகவும்‌, பொது சேவைகளில்‌ நாட்டம்‌ கொண்டவராகவும்‌, பள்ளி மாணவர்களின்‌ இடைநிற்றலைக்‌ குறைத்தல்‌, பள்ளி மாணவர்‌ சேர்க்கை, தேர்வில்‌ தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல்‌, கல்வித்தரத்தில்‌ பின்தங்கிய மாணவர்களின்‌ தரத்தை முன்னேற்றப் பாடுபடுபவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

6. அரசியலில்‌ பங்கு பெற்று அரசியல்‌ கட்சிகளுடன்‌ தொடர்புடைய ஆசிரியர்களின்‌ பெயர்கள்‌ கண்டிப்பாகப்‌ பரிந்துரைக்கப்படக்‌ கூடாது.

7. கல்வியினை வணிகரீதியாகக்‌ கருதிச் செயல்படும்‌ ஆசிரியர்களையும்‌, நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும்‌ ஆசிரியர்களையும்‌ இவ்விருதிற்குத்‌ தகுதியற்றவர்களாகக்‌ கருதப்பட வேண்டும்‌.

8. சிறந்த முறையில்‌ பணிபுரியும்‌ தமிழாசிரியர்கள்‌ மற்றும்‌ சிறப்பு ஆசிரியர்களான ஓவிய ஆசிரியர்கள்‌, உடற்கல்வி ஆசிரியர்கள்‌, கைத்தொழில்‌ ஆசிரியர்கள்‌, இசை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறன்‌ ஆசிரியர்களில்‌ ததியானவர்களையும்‌ விருதிற்குப்‌ பரிந்துரைக்கும்‌போது கவனத்தில்‌கொள்ள வேண்டும்‌.

9. பரிந்துரைக்கப்படும்‌ ஆசிரியர்களின்‌ கருத்துருக்கள்‌, பெயர்ப் பட்டியலினை மாவட்டத்‌ தேர்வுக்குழுத்‌ தலைவர்‌ தமது சொந்தப்‌ பொறுப்பில்‌ வைத்துக்‌கொள்ள வேண்டும்‌. தேர்வுக்குழு உறுப்பினர்களும்‌ இது தொடர்பாக ரகசியம் காத்திடல்‌ வேண்டும்‌.

10. டாக்டர்‌ ராதாகிருஷ்ணன்‌ விருதிற்காக வரையறை செய்யப்பட்ட படிவத்தில்‌ மட்டுமே ஆசிரியர்களின்‌ கருத்துருக்கள்‌ அனுப்பப்படல்‌ வேண்டும்‌.

11. ஆகஸ்ட் மாதம்‌ 20ஆம்‌ தேதிக்குள்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ தங்கள்‌ மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விருதுகளின்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ பட்டியல்‌ தயார்‌ செய்து, 1:2 என்ற வீதத்தில்‌ தேர்வு செய்து, நல்லாசிரியர்‌ விருதிற்கான ஆசிரியர்களின்‌ கருத்துருக்களில்‌ விருதுக்குரிய சிறப்புத்‌ தகுதிகளுக்கான ஆதாரச்‌ சான்றுகளுடன்‌ இணைத்து, சாதாரணப் புத்தக வடிவில்‌ தயாரித்து ஒரு நகல்‌ மட்டும்‌ பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநருக்கு‌ (இடைநிலைக்கல்வி) அனுப்பி வைத்தல்‌ வேண்டும்‌.

12. வருவாய்‌ மாவட்டத்தில்‌ உள்ள ஆசிரியர்களைத்‌ தேர்வு செய்து பரிந்துரை செய்யப்படும்‌பொழுது, அனைத்து வகை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அனைத்துப் பள்ளிகளையும்‌ உள்ளடக்கியதாக உள்ளதைக்‌ கவனத்தில்‌கொள்ள வேண்டும்‌.

13.மாநில அரசால்‌ பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும்‌ பரிந்துரை செய்தல்‌ கூடாது.

14. கோவிட்‌ பெருந்தொற்றுக் காலத்தில்‌ இணையவழிக் கல்வி உள்ளிட்ட மாணவர்களை நேரடியாகச் சென்றடையும்‌ வகையில்‌ கல்விப்‌ பணியாற்றியிருக்க வேண்டும்‌. கோவிட்‌ பெருந்தொற்றுக் காலத்தில்‌ மேற்கூறிய வழிகளில்‌ கல்விப் பணி ஆற்றாத ஆசிரியர்களை அறவே தவிர்க்க வேண்டும்‌.

15. மாவட்டத்‌ தேர்வுக்‌ சூழுவால்‌ இறுதி செய்யப்பட்ட ஆசிரியர்களின்‌ சார்பான கருத்துருக்கள்‌ ஒரு நகல்‌ பதிவு அஞ்சல்‌ மூலம்‌, சென்னை-6, பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநர்‌ (இடைநிலைக்‌ கல்வி) பெயரிட்ட உறையில்‌ *டாக்டர்‌ ராதாகிருஷ்ணண்‌ விருது" "ரகசியம்‌" எனக்‌ குறிப்பிட்டு வரும்‌ ஆகஸ்ட் 20ஆம்‌ தேதிக்குள்‌ அனுப்பி வைக்க அனைத்து ஆய்வு அலுவலர்களும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

மேலும்‌, இணைப்புப்‌ படிவத்தை முழுவதுமாகப்‌ பூர்த்தி செய்து, பள்ளிக்‌ கல்வி ஆணையரக ஐ பிரிவு மின்னஞ்சல்‌ (isec.tndse@nic.in) முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

16.பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர்களின்‌ பெயர்ப்‌ பட்டியலை மாவட்டத்‌ தேர்வுக் குழுத்‌ தலைவர்‌ ரகசியம்‌ காத்து, தனது சொந்தப் பொறுப்பில்‌ பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்‌’’.

இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment