தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், கல்லூரிகளையும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளையும் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, 50 சதவிகித மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும், வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு படிக்க வரும் மாணவர்கள் தடுப்பூசி சான்று, ஆர்டிபிசிஆர் சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவியர் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதன்படி, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக சென்றுவர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment