
ஒரே செடியில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை விளைவித்து இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் காய்கறி ஆராய்ச்சி பிரிவு புதிய சாதனை படைத்துள்ளது. இரண்டு தாவரங்களை ஒன்றாக இணைத்து அதை பயிர் செய்வதன் மூலம் பல நன்மைகள் கிடைப்பதாக தாவரவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையிலான தாவரங்கள் இணைக்கப்படும் முறையை 'இன்டர் ஸ்பெசிபிக் கிராப்டிங்' (inter specific grafting) என்பார்கள்.
உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Agricultural Research Institute) காய்கறி ஆராய்ச்சிப் பிரிவு உள்ளது. இங்கு, ஒரே செடியில் உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை விளைவித்தும், கத்திரிக்காய் மற்றும் தக்காளியை ஒரே செடியில் விளைவித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்றது. இந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது. மேலும், இதன் மூலம் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் காட்சிக்கு வைக்கப்பட்டது.
25 முதல் 30 நாட்கள் ஆன கத்திரிக்காய் விதைகள் மற்றும் 22 நாள் முதல் 25 நாட்களான தக்காளி விதைகள் ஒன்றிணைக்கப்படுகிறது. இப்படி ஒன்றிணைக்கப்பட்ட விதைகள் 5 முதல் 7 நாட்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட சீதோஷ்ண நிலையில் வளர்க்கப்படுகிறது. இப்படி வளர்க்கப்பட்ட விதைகள் மேலும் 5 முதல் 7 நாட்களுக்கு நிழலில் பராமரிக்கப்படுகிறது. இந்த செடிகள் விவசாய களத்திற்கு மீண்டும் மாற்றப்படுகிறது.






No comments:
Post a Comment