உலக சுகாதார அமைப்பு (WHO) சர்க்கரை நோயை நாள்பட்ட நோய் வகையில் வரையறுத்துள்ளது. உடலில் நமது கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யத் தவறினாலோ அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாதபோதோ ஏற்படும் நிலையினால் உண்டாகும் நோய் தான் சர்க்கரை நோயாகும்.
இன்சுலின் என்பது உடலில் உள்ள இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் ஹார்மோன் ஆகும்.
தற்போது, நீரிழிவு நோய் என்பது மனித இறப்புக்கான ஒன்பதாவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது, உலகளவில் 1.5 மில்லியன் இறப்புகள் இதனால் உயிரிழந்தாக கணக்கிடப்பட்டுள்ளது. உடலில் ஏற்படும் சில வலிகள் சர்க்கரை நோயின் மோசமான அபாயத்தை குறிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றை பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நரம்பு வலி
உயர் இரத்த சர்க்கரை என்பது நீரிழிவு நரம்பியல் நோயை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது பெரிஃபெரல் நியூரோபதி என்றும் அழைக்கப்படுகிறது. உங்கள் கைகள் மற்றும் கால்களில் இருந்து சமிக்ஞைகளை அனுப்பும் நரம்புகளை சேதப்படுத்தும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது பொதுவாக நீரிழிவு நரம்பு வலி ஏற்படுகிறது. அதிக இரத்த குளுக்கோஸ் நரம்புகளை, இரத்த நாளங்களை சேதப்படுத்துவதன் மூலம் பாதிக்க செய்கிறது.
வலியின் வகைகள்
நீரிழிவு நரம்பியல் நோய் என்பது உடலில் வலி மற்றும் அசௌகரியமான உணர்வுகளுக்கு வழிவகுக்கும். இது உங்கள் கை விரல்கள், கால் விரல்கள், கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மையை உண்டாக்கும். மற்றும் கூச்சத்தை ஏற்படுத்தும். தொடர்ச்சியான உயர் இரத்த சர்க்கரை அளவினால் பாதிக்கப்பட்டால் கூச்ச உணர்வு அல்லது உணர்வற்ற நிலை, எரியும் உணர்வு, கால்கள் மற்றும் கைகள் போன்ற புறப் பகுதிகள் அல்லது முனைகளில் கூர்மையாக குத்துதல் அல்லது சுடுதல் போன்ற உணர்வுகள் ஏற்படும். எனவே, நீரிழிவு நரம்பு வலி உள்ளவர்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி அல்லது கைகளுக்கு வேலை தரும் பயிற்சிகளை அன்றாடம் மேற்கொள்வது கடினமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
டைப் 2 சர்க்கரை நோய்
டைப் 2 நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சில அறிகுறிகள் குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதிக தாகம், வறண்ட வாய், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மிகுந்த சோர்வு, மங்கலான பார்வை, திடீரென்று ஏற்படும் உடல் எடை இழப்பு, சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகள் (சிஸ்டிடிஸ்) மற்றும் தோல் நோய்த்தொற்றுகள் போன்ற தொடர்ச்சியான தொற்றுகள், இரைப்பை குடல் பிரச்சினைகள், உறக்கம் மற்றும் உணவு முறை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் மூலம் இதன் பாதிப்பை உணரலாம்.
என்ன செய்வது?
உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதில் உங்கள் வாழ்க்கை முறை சார்ந்த பழக்க வழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, சில உணவுகளை தவிர்ப்பது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது...இவை அனைத்தும் இரத்த சர்க்கரையை அளவை சீரான முறையில் வைத்திருக்க உதவும். அதே போன்று கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) அதிகம் உள்ள கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அவசியம் தவிர்க்கப்பட வேண்டும். அதே போன்று, சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள், வெள்ளை ரொட்டி, உருளைக்கிழங்கு, வெள்ளை அரிசி ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமற்றவை.
No comments:
Post a Comment