பேருந்துகளில் பயணிக்கும் பொது மக்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பேருந்துகளில் பயணிக்கும் ஒரு சில நபர்கள் செய்யும் அடாவடித்தனத்தால் மற்ற பயணிகளுக்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக இதில் இளைஞர்கள் அதிக அளவில் பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கின்றனர். இது சம்பந்தமாக தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வாகனத்தில் பயணிக்கும் ஆண் பயணி, பெண்களை முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக புண்படுத்தக்கூடிய வகையிலான சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுத்தல் கூடாது. பேருந்துகளில் யாரேனும் தொல்லை கொடுத்தால், குற்றம் செய்தவர் சிறுவராகவோ இளைஞராகவோ அல்லது முதியவராகவோ இருந்தாலும் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பேருந்து ஓட்டுநர் அல்லது நடத்துனர் புகார் தெரிவிக்கலாம்.
நடத்துனர் எச்சரிக்கை விடுத்தப் பிறகு, புகாருக்குள்ளான பயணியை இறக்கிவிடலாம் அல்லது வழியில் உள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். வாகனத்தில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டும். நடத்துநர் இல்லாதபோது, இவை அனைத்தும் ஓட்டுநரின் பொறுப்பு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment