சுதந்திரம் பெற்றவுடன், டில்லி செங்கோட்டையில் பட்டொளி வீசி பறந்த, முதல் தேசியக்கொடி, குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது.இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தவுடன் நாடு முழுதும் ஏற்ற, அதிகளவு தேசியக்கொடி தேவைப்பட்டது.
இதற்காக பல்வேறு நிறுவனங்களில் 'ஆர்டர்' கோரப்பட்டது.வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனுாரை சேர்ந்த வெங்கடாசலம், 'இந்துஸ்தான் லுங்கி கம்பெனி' நடத்தி வந்தார். இவர், 10 ஆண்டுகள் குடியாத்தம் நகராட்சி தலைவராக இருந்தார்.
அதிகளவு கைத்தறி துணியிலான தேசியக்கொடி தயாரித்து கொடுப்பதாக கடிதம் அனுப்பினார்.அப்போதைய சென்னை மாகாண அரசு அதிகாரிகள், குடியாத்தம் வந்து ஆய்வு செய்து அனுமதி அளித்தனர். இதையடுத்து ஆந்திரா மாநிலம், சித்துார் பிங்கலி வெங்கையா வடிவமைத்த, 12 அடி அகலம், 18 அடி நீளத்தில் கைத்தறி துணியிலான மூன்று தேசியக்கொடிகளை, வெங்கடாசலம் அவர் மனைவி முனிரத்தினம் ஆகியோர் தயாரித்து அனுப்பினர்.
அதில் ஒன்று, 1947 ஆகஸ்ட் 15ல் டில்லி செங்கோட்டையிலும், மற்றொன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் ஏற்றப்பட்டன. மேலும், குடியாத்தம் நெசவாளர்களுடன் இணைந்து, இரண்டு கோடி தேசியக்கொடிகளை கைத்தறியில் தயாரித்து, நாட்டின் பல பகுதிகளுக்கு அனுப்பினர்.பிரதமராக பதவி ஏற்றதும், தேசியக்கொடியை தயாரித்த வெங்கடாசலத்தை பாராட்டி, நேரு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை, அவரது குடும்பத்தினர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment