அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி கல்வித் தொலைக்காட்சி என்ற பிரத்யேக தொலைக்காட்சியை கடந்த அ.தி.மு.க அரசு 2019-ம் ஆண்டு தொடங்கியது.
இதில் பள்ளி மாணவர்களுக்கான பாடம் ஒளிபரப்பட்டு வருகிறது. அதையும் தாண்டி, வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் கற்றல் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.
மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை தடை இன்றி நடத்தியது. அப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி இன்றியமையாததாக அமைந்தது. இதனை மேம்படுத்த தற்போது திமுக அரசும் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் தனியாக தொலைக்காட்சிகளை ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், "மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரத்தியேக தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு தொடர்பாக சேவைகளை வழங்க தடை விதிக்கப்படுகிறது.
எனவே, மத்திய, மாநில அரசுகளின் விநியோகம் சார்ந்த நிறுவனங்கள் டிசம்பர் 31, 2023-க்குள் தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுடில் ஒளிபரப்பில் உள்ள சேனல்கள் பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் தங்களை பதிவு செய்துக் கொள்ளவேண்டும். வங்காள கிரிக்கெட் சங்கம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சட்ட அமைச்சகத்தின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் படி இந்த உத்தரவு வழங்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அமலுக்கு வந்தால், பள்ளிக்கல்வித்துறை நடத்தி வரும் கல்வி தொலைக்காட்சிக்கும், மாநில அரசின் விளம்பர சேனல் ஒன்றும் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக, கல்வித் தொலைக்காட்சி பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் செல்லும் நிலையும் ஏற்படும். எனவே கல்வி தொலைக்காட்சியை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment