Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 16, 2022

பொறியியல் துணை கலந்தாய்வு: நவம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது

பொறியியல் படிப்புகளுக்கான துணைக் கலந்தாய்வு நவம்பர் 20-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 54,278 இடங்கள் உள்ளன.

இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20 முதல் நவம்பர் 10-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 93,571 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 85,023 இடங்களில் மட்டுமே மாணவர்கள் கல்லூரிகளில் சென்று சேர்ந்துள்ளனர்.

இதையடுத்து எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வுக்குரிய சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த நவம்பர் 9-ல் தொடங்கி 13-ம் தேதி முடிவடைந்தது. இதற்கு 9,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் அரசு உதவி மையங்கள் வாயிலாக நடத்தி முடிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல் நவம்பர் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதன்பின்னர் அனைத்துப் பிரிவினருக்கான துணைக் கலந்தாய்வு நவம்பர் 20 முதல் 22-ம் தேதி வரை இணைய வழியில் நடைபெற இருக்கிறது.

மேலும், எஸ்சிஏ காலியிடங்களில் எஸ்சி வகுப்பினருக்கான கலந்தாய்வு நவம்பர் 24, 25-ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதனுடன் இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு முழுமையாக நிறைவு பெறுகிறது. ஒட்டுமொத்தமாக இந்தாண்டு கலந்தாய்வு முடிவில் 60 ஆயிரத்துக்கும் மேலான இடங்கள் காலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment