Subscribe Us

Monday, December 12, 2022

முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்: ஹிமாசல் முதல்வர்


முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று ஹிமாசல பிரதேச முதல்வராக பதவியேற்ற சுக்விந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொத்தம் 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில், அக்கட்சி 40 தொகுதிகளில் வென்றது. இதைத் தொடா்ந்து, ஹிமாசல பிரதேச முதல்வராக சுக்விந்தா் சிங் சுக்குவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். சிம்லாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆா்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த நிலையில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று ஹிமாசல பிரதேச முதல்வராக பதவியேற்ற சுக்விந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, நாங்கள் 10 உத்தரவாதங்களை வழங்கியுள்ளோம், அவற்றை நாங்கள் செயல்படுத்துவோம். நாங்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

ஹிமாசல் முதல்வராகப் பதவியேற்றுள்ள சுக்விந்தா் சிங் சுக்கு, பேருந்து ஓட்டுநரின் மகன் ஆவாா். முன்னதாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதற்கு பழைய ஓய்வூதியத் திட்டமே முக்கிய காரணம் என்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed