தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டன. இதில் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த தேர்வில் மாணவ, மாணவியர் எடுத்த அதிக மதிப்பெண் உட்பட பல முக்கிய விவரங்கள் வெளியாகி வருகின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03 சதவிகிதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.38 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் 91.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழில் எப்போதும் சதம் அடிப்பது மிக மிக கடினம். ஆனால் கடந்த சில வருடங்களாக சதம் அடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் சதம் அடிப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. வெறும் 2 பேர் மட்டுமே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் சதம் அடித்துள்ளனர்.
என்ன செய்யலாம்?: இதில் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் மாணவ, மாணவியர் பலரும் அடுத்து என்ன செய்யலாம், எந்த கல்லூரியில் சேரலாம் என்று ஆலோசனை செய்ய தொடங்கிவிட்டனர்.
பலருக்கும்.. முக்கியமாக கிராமப்புற மாணவர்களுக்கு எங்கே படிப்பது, எந்த கல்லூரியில் என்ன கோர்ஸ் எடுப்பது என்பது போன்ற தெளிவான திட்டமிடல் இல்லை.
இந்த நிலையில்தான் இவர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எங்கே சேர வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று பல படிநிலையில்களில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பம்: அதன்படி விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்த ஆலோசனைகள் என அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டலுக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
காலை 8 மணி - இரவு 8 மணி வரை அழைத்து ஆலோசனைகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் career guidance cells எனப்படும் உயர்கல்வி ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் தலைமையாசிரியர்கள், உயர் கல்வி வழிகாட்டுதலில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் என்எஸ்எஸ் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் நிர்வாகிகள் ஆகியோர் இடம்பெறுவர். .
இந்த குழு சார்பாக மாவட்ட அளவில் ஒரு பயிற்சி முகாம் நடத்தப்படும். அந்த பயிற்சி முகாமில் மாணவர்களை எப்படி வழி நடத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்படும். அதன்பின் மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் பயிற்சிகள் அளிக்கப்படும். அதை தொடர் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
மே 6ம் தேதியில் இருந்து மாணவர்களுக்கு நேரடியாக பள்ளிகளில் இது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதி வரை பயிற்சிகள் வழங்கப்படும் என்பதால் மாணவ, மாணவியர் முடிந்த அளவு இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்., பள்ளிகளில் நீங்கள் உங்கள் மகன் அல்லது மகளுடன் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும்.
என்னென்ன விவரங்களை பெற முடியும்?: மாணவர்களுக்கான உதவித்தொகை பட்டியல் விவரங்கள், வெளி/ உள் மாநிலம் மற்றும் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளின் பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறித்த விவரம், எந்த பிரிவில் படித்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று மாணவர்களுக்கு வழிகாட்டத் தேவையான தகவல்களை இந்த குழு வைத்து இருக்கும்.
பிற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் உள்ள நல்ல கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளை அனுப்பத் தயங்கும் பெற்றோர்களுக்கு அதற்கு உரிய ஆலோசனைகள் இவர்கள் மூலம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment