Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 8, 2023

மாதம் ரூ.1000 மகளிர் உதவித் தொகை - ஜூலை 3-ஆவது வாரம் விண்ணப்பிக்க ஏற்பாடு!

மகளிர் உரிமைத் தொகை பெற ஜூலை 3 வது வாரத்தில் சிறப்பு முகாம்கள் அமைத்து விண்ணப்பங்கள் பெற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயலாக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நுகர்பொருள் வாணிப கழகம், சென்னை மாவட்டம், காவல் துறை, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன்படி, ஜூலை 3-வது வாரம் முதல் சிறப்பு முகாம்களை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆணையர் வழங்கிய அறிவுறுத்தல்கள்:

பயனாளிகளின் விவரங்களை தேர்வு செய்ய சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் கண்டறியப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் தேவையான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

முகாம்கள் நடைபெறும் இடங்களில் குடிநீர் வசதி, மின்விசிறி, மின்வசதி, இருக்கைகள், கழிப்பறை, சாய்வு நடைபாதை உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேவையான இடங்களில் பந்தல்களும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மண்டல அலுவலர்கள், காவல் துறை ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முகாமுக்கும் ஒரு பொறுப்பு அலுவலர், உதவிப் பொறியாளர், வரி மதிப்பீட்டாளர், உரிமம் ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார அலுவலர், தூய்மைப் பணி மேற்பார்வையாளர் மற்றும் தூய்மைப் பணி ஆய்வாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பணிகளை மேற்பார்வையிட மண்டல அலுவலர்கள் தலைமையில், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், உதவி சுகாதார அலுவலர்கள், உதவி கணக்கு அலுவலர்கள், உதவி மின் பொறியாளர்கள் நிலையில் ஒரு அதிகாரியும், அந்தப் பகுதியை சார்ந்த ஒரு உதவி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தலைமையகத்திலிருந்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு அலுவலர்களாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக TNeGA மூலமாக சென்னை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்களுக்கு 06.07.2023 அன்று பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

தன்னார்வலர்கள் மூலமாக பயோமெட்ரிக் மூலம் பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படும்.

இதற்கான பயோ மெட்ரிக் கருவிகளை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலர் e-District மேலாளர்களுடன் சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்து மண்டல அலுவலர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment