Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 31, 2025

முதுநிலை நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு


ஜூன் 15-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வை (NEET-PG) இரண்டு ஷிப்டுகளுக்குப் பதிலாக ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீட்-பிஜி தேர்வுகளை இரண்டு ஷிப்டுகளில் நடத்தும் தேசிய தேர்வு வாரியத்தின் முடிவை நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் குமார் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு நிராகரித்தது. இது "எதேச்சதிகாரமான தன்மையை உருவாக்குகிறது” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, ஒரே ஷிப்டில் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், முழுமையான வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. தேர்வு திட்டமிடப்பட்ட தேதியான ஜூன் 15-ம் தேதிக்குள் இந்த ஏற்பாடுகளைச் செய்ய முடியாது என்று தேசிய தேர்வு வாரியம் கண்டறிந்தால், நேர நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

பிஜி நீட் தேர்வுகளை இரண்டு ஷிப்டுகளில் நடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இது குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், "தேர்வை இரண்டு ஷிப்டுகளில் நடத்துவது தன்னிச்சையான தன்மைக்கு வழிவகுக்கிறது மற்றும் சமநிலையை வழங்க முடியாது. எந்த இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரியான சிரமம் அல்லது எளிமையைக் கொண்டிருப்பதாக ஒருபோதும் கூற முடியாது. ஒரே ஷிப்டில் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதை தேர்வு அமைப்பு பரிசீலித்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில், ஒரு சிலரே இரண்டு ஷிப்டுகளில் தேர்வை நடத்தும் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் என்று வாதிட்ட தேசிய தேர்வு வாரிய வழக்கறிஞர், ஒரு ஷிப்டில் தேர்வை நடத்த 900 கூடுதல் மையங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஜூன் 15-க்கு முன் இது சாத்தியமில்லை என்றும் கூறினார். ஆனால், "தற்போது நாட்டில் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, தேர்வை ஒரே ஷிப்டில் நடத்துவதற்கு தேவையான மையங்களை தேர்வு வாரியம் கண்டுபிடிக்க முடியவில்லை என சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

No comments:

Post a Comment