போதுமான ஆசிரியர்கள் இல்லாத அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆனலைன் வகுப்பு நடத்த முடியுமா என்பது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குநர் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மணிபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் பிரிவுக்குத் தேவையான தகுதியான ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும், சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சுற்றுச்சுவர், சிசிடிவி கேமராக்கள், நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கவும், காவலாளி மற்றும் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர், பிற பள்ளிகளிலிருந்து பணிப் பகிர்வு முறையில் வரும் ஆசிரியர்கள் வாரம் சில நாட்கள் மட்டுமே வருகை தருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, மாணவர்களின் கல்வியை பேண ஆசிரியர்கள் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் வகுப்புகள் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை அரசு பரிசீலிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகப் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மூலம் தனிக் கணக்கு ஒன்று தொடங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இதுதொடர்பான சாத்தியக் கூறுகளைப் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆய்வு செய்து, அது நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருந்தால் நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.17க்கு தள்ளி வைத்தனர்.










No comments:
Post a Comment