சுதந்திர தினக் கவிதை

சுதந்திர தினக் கவிதை

விடியலை நோக்கி

நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்;
விடியலை நோக்கி செல்கின்றோம்;
வேகம் கொஞ்சம் குறைவுதான்;
தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை;
தயங்கி நிற்கவும் போவதில்லை;
பயணம் என்றும் தொடரும்;
விடியலை வென்றும் காண்போம்.


சுதந்திர தினச் சிந்தனை.

நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன; இன்னமும் கூட சுத்தமான குடிநீர் உட்பட அத்யாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் அதிக பட்ச மக்களுக்கு கிட்டாமல்தானிருக்கிறது.எங்கு நோக்கினும் ஊழல், வறுமை வேலையில்லாத் திண்டாட்டம் நிறைந்திருக்கிறது.

ஏனிந்த நிலை...?

நமக்கிருக்கும் அளவுக்கு மிஞ்சிய சகிப்புத் தன்மையே இதற்கெல்லாம் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ஊழல் என்று செய்தி கேட்கிறோம் ;பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கூட கோடி கோடியாய கொள்ளையடிப்பதைப் பார்க்கிறோம்;கோடி கோடியாய் நமது வரிப்பணம் ஊழல் பேர்வழிகளின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது;
ஆனால் நாமோ யார் வந்தாலும் இப்படித்தான் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொண்டு ஊழலை சகித்துக் கொள்கிறோம்; ஊழல் இல்லாத இடம்தான் ஏது என்று ஊழலுக்கு வக்காலத்தும் வாங்குகிறோம்.
அரசியல் வாதி தன் குடும்பத்தினர் அனைவரையுமே பதவியில் அமர வைத்து நாட்டைச் சுரண்டுவதைப் பார்க்கிறோம்; விலைவாசிகள் விஷம்போல் ஏறுகின்றன;வறுமை தலை விரித்தாடுகிறது;அனைத்திலும் போலிகள்..கலப்படம்.
ஆனால், இவற்றையெல்லாம் மாற்ற முடியாது என்று நாம் சகித்துக் கொள்ள பழகிக் கொள்கிறோம்.
இப்படிப்பட்ட பொறுமையும் சகிப்புத் தன்மையுமே இந்த நிலைக்கு பிரதான காரணமாகும்.
அநீதிகளைக் கண்டு, முறைகேடுகளைக் கண்டு கோபம் கொள்ள வேண்டும்;இது நமது நாடு; இதன் ஒவ்வொரு வளர்ச்சியும் தாழ்ச்சியும் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்..

சுதந்திர தின உறுதி.

நம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;
நாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்;
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel