நீட்’ நுழைவு தேர்வில் கட்டண பிரச்னைக்கு தீர்வு!!!

நீட்’ நுழைவுத் தேர்வில், தேர்வு கட்டணம் செலுத்துவதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு உள்ளன. இதற்கான தீர்வு குறித்து, சி.பி.எஸ்.இ., வழிகாட்டுதல் வழங்கி உள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். ‘எய்ம்ஸ்’ மற்றும் ஜிப்மர் கல்லுாரிகளில் சேருவதற்கு, அந்தந்த கல்லுாரிகள் நடத்தும், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வியாண்டில், மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இதற்கான, ‘ஆன் லைன்’ பதிவு, பிப்., 9ல் துவங்கியது; மார்ச், 8 வரை நடக்கிறது. இதில், மாணவர்கள், ஆன் லைனில் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.இந்த நடைமுறையின் போது, சில சிக்கல்கள் எழுகின்றன. பல மாணவர்களின் வங்கிக் கணக்கில் கட்டண தொகை பிடிக்கப்பட்டாலும், தேர்வு குழுவுக்கு, அது சேராமல் நின்று விடுவதாக, புகார்கள் எழுந்துள்ளன.  
இதற்கான தீர்வுகள் குறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. அந்த வழிகாட்டுதல்கள், சி.பி.எஸ்.இ.,யின், https://cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.அதில், ‘கட்டணம் செலுத்தியது குறித்து, ரசீது கிடைக்காவிட்டால், 24 மணி நேரத்திற்குள் மீண்டும், ஆன் லைனில் ரசீதை பெற, மாணவர்கள் முயற்சிக்க வேண்டும். ‘அப்போதும் ரசீது கிடைக்காவிட்டால், மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே செலுத்திய கட்டணம், ஏழு நாட்களுக்குள் வங்கிக்
கணக்கில், வரவு வைக்கப்படும்’ என, கூறப்பட்டு உள்ளது. 
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel