Subscribe Us

Wednesday, June 27, 2018

எம்.பி.பி.எஸ்.: முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் பங்கேற்கும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு சான்றிதழ் சமர்ப்பித்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.



தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் சிறப்புப் பிரிவினரில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கடந்த ஆண்டு வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 எம்.பி.பி.எஸ். இடங்களும், 1 பிடிஎஸ் இடமும் ஒதுக்கப்பட்டு வந்தது. 

இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அதிக எண்ணிக்கையிலானோர் விண்ணப்பிப்பதாலும், மருத்துவ இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாலும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிகழ் கல்வியாண்டு முதல் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 10 எம்.பி.பி.எஸ். இடங்கள், 1 பிடிஎஸ் இடம் என அதிகரிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய அறிவிப்பு: எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்கும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் செவ்வாய்க்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



அதன்படி, மாவட்ட ராணுவ வீரர்கள் வாரியத்தின் இணையதள சார்பு சான்றிதழைச் சமர்ப்பிக்காத முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் வியாழக்கிழமை (ஜூன் 28) மாலை 5 மணிக்குள் அந்த சான்றிதழைத் தேர்வுக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கத் தவறுவோர் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளின் ஒதுக்கீட்டில் இடங்களைப் பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed