Search This Blog

Saturday, July 7, 2018

தனியார் பள்ளிகளின் அனுமதியை திரும்பப்பெற அரசுக்கு அதிகாரம் மசோதா தாக்கல்

0 comments
தனியார் பள்ளிகளுக்கு தண்டனை விதிக்கவும், அனுமதியை திரும்பப்பெறவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. 

சட்டசபையில் நேற்று தனியார்
பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்த வகை செய்வதற்கான சட்டமசோதா ஒன்றை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது:-



தனியார் பள்ளிகளை நிர்வகிக்கவும், ஒழுங்குமுறைப்படுத்தவும் அரசால் 1973-ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது. 2010-ம் ஆண்டு தமிழ்நாடு ஒரே மாதிரியான பள்ளிக் கல்விச் சட்டம் மற்றும் 2009-ம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்வியைப் பெறுவது குழந்தைகளின் உரிமைச் சட்டம் ஆகியவற்றின் விளைவாக தனியார் பள்ளிகள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கு ஒரு புதிய விரிவான சட்டத்தினை இயற்றுவது பற்றி ஆலோசிப்பதற்கு ஒரு நிபுணர்குழு அமைப்பதற்கு 2012-ம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நிபுணர்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழு செயலாற்றலில் உள்ள அனைத்துச் சட்டங்களை, விதிகளை, தொகுப்புச் சட்டங்களை, அரசு ஆணைகளை மற்றும் வழிநடத்தும் முறைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அரசின் ஆலோசனைக்காக சட்டத்தின் வரைவை சமர்ப்பித்திருக்கிறது.



அந்த சட்ட வரைவின் அடிப்படையில் அரசு விரிவான சட்டம் ஒன்றினை இயற்றுவதென முடிவு செய்திருக்கிறது. இந்த சட்டமசோதா தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் உயிர் மற்றும் உடைமை பாதுகாப்பை அளிப்பதற்கு அப்பள்ளியை வற்புறுத்துகிறது. மேலும் தனியார் பள்ளிகளில் அடிப்படையாக குறைந்தபட்ச தரங்களை, அளவுகளை மற்றும் சேர்க்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு நிச்சயிப்பதன் மூலம் தனியார் பள்ளிகளில் தரமான கல்வியை உறுதிப்படுத்துதலை முன்மொழிகிறது.

வருங்காலத்தில் கல்வியை வியாபாரமாக்குதலை தடுப்பதற்கும், பலமான சமுதாயத்தை அமைப்பதற்காக பலமான மதிப்பீடு முறைக்காக அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கும். ஏற்பளிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்படாத பள்ளி எதிலும் குழந்தை சேர்க்கப்படுவதை தடுக்கிறது. ஏற்பளிப்பினை திரும்பப்பெறுவதின் அடிப்படையில் பள்ளி நடத்துவதை தடை செய்வதற்கான கட்டளையிடும் வகைமுறையைச் செய்கிறது.

மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு இந்தச் சட்டமசோதா கல்வியில் குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறார் என்பதன் அடிப்படையில் வாரியத் தேர்வினை எழுதுவதற்கு அல்லது பிற நியாயமற்ற காரணங்களுக்காக, இல்லாதவற்றிற்காக மாணவர்களை தடுக்கும் எவரையும் தண்டனை விதிப்பதற்கு இந்தச் சட்டமசோதா அரசுக்கு அதிகாரமளிக்கிறது.



அத்தகைய சிறுபான்மை பள்ளிக்கு சிறுபான்மை தகுதியின் பேரில் பாதுகாப்பினை உறுதி செய்தும் இந்தச் சட்டத்தின் வகைமுறைகள் மற்றும் விதிகளில் இருந்து விலக்களித்தல் உள்ளடங்கலாக சிறுபான்மை தனியார் பள்ளிகளுக்காக சிறப்பு வகைமுறைகளை செய்வதற்கு விழைகிறது.