
ஆயுத பூஜை நேற்று முடிவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்று விஜயதசமி நாள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். அதற்கேற்ப மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு இன்று காலை ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்தனர். கோயிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் பெற்றோர்கள் தட்டில் அரிசியைப் பரப்பி, அதில் தமிழின் முதல் எழுத்தாம் "அ" என்ற உயிரெழுத்தை தங்களுடைய குழந்தைகளை எழுதவைத்துத் தங்க குச்சி மூலம் நாக்கிலும் எழுதினார்கள்.
இதேபோன்று, தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு அரிசியில் எழுத்துக்களை எழுதிப் பயிற்றுவிக்கும் நிகழ்வை இன்று மேற்கொண்டுவருகின்றனர்.









