5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வா?: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்பதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி பேசியது:
5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படப் போவதாகச் செய்திகள் வருகின்றன. இந்த முறையை அமல்படுத்தினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர். இடைநிற்றல் அதிகரிக்கும். அதனால், 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தக்கூடாது என்றார்.


அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்:
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்பது மத்திய அரசின் முடிவு. இதனைச் செயல்படுத்துவது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்தத் தேர்வை இதுவரை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்றார்.
அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுந்து பேசுவதற்கு அனுமதி கேட்டார். பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அனுமதித்தார்.
தங்கம் தென்னரசு: இதுவரை ஏற்கவில்லை என்றால், இனிமேல் அரசு ஏற்குமா? மத்திய அரசு கல்விக் கொள்கை குறித்து கொள்கை முடிவு எடுத்து 5 மற்றும் 8-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் செங்கோட்டையன்: தமிழக அரசின் கொள்கை முடிவு குறித்து முதல்வர், துணை முதல்வருடன் அமைச்சரவையில் முடிவு எடுத்துதான் கூற முடியும் என்றார்.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel