12 லட்சம் ஓட்டுகள் என்னாகும்? ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், அ.தி.மு.க., அரசு மீது கடும் கோபம்

'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதால், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், அ.தி.மு.க., அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். அப்போதே, 'தேர்தலில் எங்கள் வலிமையை காட்டுவோம்' என, வெளிப்படையாக எச்சரித்தனர்.



ஆனாலும், இவர்களின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், முதன் முதலாக, பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்களை தேர்தல் பணிக்கு களம் இறக்குவது உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை, அ.தி.மு.க., அரசு எடுத்தது.அதேநேரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தரப்பில், 12 லட்சம் ஓட்டுகளையும், சிந்தாமல், சிதறாமல் அள்ள வேண்டும் என, தற்போது மறைமுக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.'அரசு என்ன வியூகம் வகுத்தாலும், இ.டி.சி., - எலக் ஷன் டூட்டி சர்ட்டிபிகேட் - என்ற தேர்தல் பணி சான்றை வாங்க மறவாதீர்கள். அதில் தான் சூட்சுமம் உள்ளது' என, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர், அரசு ஊழியர்கள்.



இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

எப்படியும், 99 சதவீதம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அதே லோக்சபா தொகுதியில் தான் பணிபுரிய வேண்டி வரும். அதேநேரம், இது லோக்சபா தேர்தல் என்பதால், தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிக்குள் தான் பணிபுரிய வேண்டியிருக்கும். எனவே, இ.டி.சி.,யை மறக்காமல், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரிடம் பெற்று சென்று விடுங்கள். அச்சான்று மூலம், நீங்கள் பணியாற்றும் மையத்திலேயே, உங்கள் ஓட்டை அளிக்கலாம். எனவே, வாக்காளர் வரிசை எண், ஓட்டு மைய விபரத்தை தெரிந்து வைத்து, இ.டி.சி.,யை பெற்று, பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் பணிபுரியும் மையத்தில், ஓட்டளித்து, இ.டி.சி., மூலம் ஓட்டளித்தவர் விபரத்தையும், ஓட்டு கணக்கு விபர படிவத்தில், மொத்த ஓட்டுகள் எண்ணிக்கை விபரத்தையும் குறிப்பிட்டு விடுங்கள் என, அறிவுறுத்தி வருகிறோம். இதன்மூலம், 2 லட்சம் ஆசிரியர்கள், 10 லட்சம் அரசு ஊழியர்களின் ஓட்டுகளில் ஒன்றைக் கூட வீணாக்கக் கூடாது என, சபதம் எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel