Search This Blog

Sunday, March 10, 2019

அரசு ஊழியர்கள், தங்கள் வீடுகளில் நடக்கும் விழாக்களில், உறவினர்களிடமிருந்து பெறும் பரிசுப் பொருட்களுக்கு, கட்டுப்பாடு!

0 comments
அரசு ஊழியர்கள், தங்கள் வீடுகளில் நடக்கும் விழாக்களில், உறவினர்களிடமிருந்து பெறும் பரிசுப் பொருட்களுக்கு, கட்டுப்பாடு விதித்து,அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், ஸ்வர்ணா பிறப்பித்துள்ள அரசாணை: சிறப்பு நிகழ்ச்சிகளான திருமணம், திருமண நாள், பிறந்த நாள் விழாக்கள், மத பண்டிகைகள்,இறுதிச் சடங்குகள் போன்ற நாட்களில், தமிழக அரசு ஊழியர்கள், உறவினர்களிடம் இருந்து, பரிசாக பெறக்கூடிய பொருட்களின் மதிப்பு, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

இவ்வாறு பெறப்படும் பரிசுகள் குறித்த விபரத்தை, ஒரு மாதத்திற்குள், அரசுக்கு தெரிவிக்க வேண்டும். பரிசாக பெறக் கூடிய மொத்த தொகைகளின் மதிப்பு, 10 லட்சம் ரூபாய் அல்லது, ஆறு மாத ஊதியம் ஆகியவற்றில் எது குறைவோ, அந்தத் தொகைக்குள் தான் இருக்க வேண்டும்.மேலும், அரசு ஊழியர்கள், தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து, தனிப்பட்ட முறையில் வட்டியில்லாத கடனாக, ஐந்து லட்சம் ரூபாய் வரை வாங்கிக் கொள்ளலாம்.

அந்தத் தொகையை, அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவோ; ஏற்கனவே கட்டப்பட்ட வீட்டை வாங்கவோ; காலிமனையில் வீடு கட்டிக் கொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு,அதில் கூறப்பட்டுள்ளது.