Thursday, March 21, 2019

ஆம்புலன்சில் அமர்ந்து தேர்வெழுதிய மாணவர்

வேடசந்துார் அருகே விட்டல்நாயக்கன்பட்டியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் பாலமுரளி கிருஷ்ணன் 15, விபத்தில் கால் எலும்பு முறிந்த நிலையில், ஆம்புலன்சில் அமர்ந்து தேர்வு எழுதினார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார் பாலமுரளிகிருஷ்ணன்.

தற்போது பொதுத் தேர்வு நடப்பதால், நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார். அரசு டெப்போ அருகே எதிரே வந்த ஆம்னி வேன் மோதியதில் இடது கால் எலும்பு முறிந்தது. திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. இதில் பங்கேற்க மருத்துவ மனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனத்தில் தேர்வு மையமான அவரது பள்ளிக்கு வந்தார். ஆசிரியர்களிடம் நடந்த சம்பவத்தை தெரிவிக்கவே, தேர்வு அதிகாரிகள் மேல் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்தவாறே தேர்வை எழுத அனுமதித்தனர்.விபத்துக்கு ஆளான பின்னும் சிறிதும் கலங்காமல் விடாமுயற்சியாக தேர்வு எழுதிய மாணவரையும், உதவிய அதிகாரிகளையும் பலர் பாராட்டினர்.