Sunday, March 24, 2019

குடுமியான்மலையில் வீடுகள் தோறும் மரக்கன்றுகளை நட்ட வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள்


விராலிமலை,மார்ச்.24: வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் குடுமியான்மலையில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.



முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் சார்பாக பாலித்தீன் பயன்பாட்டினை தவிர்த்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் செ.சுகன்யா கண்ணா தொடங்கி வைத்தார்.

பேரணியில் கலந்து கொண்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பாலித்தீன் பைகளை ஒழிப்போம், நீர்வளம் காப்போம் போன்ற முழக்கங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகளை வலம் வந்தனர். மேலும் ஊர்ப்பொது மக்களிடம் பாலித்தீன் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும் அதற்கான மாற்றுப் பொருள்கள் குறித்தும் மாணவர்கள் கலந்துரையாடினர்கள்.



பின்னர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை வீடுகள்தோறும் சென்று நட்டு வைத்தனர். அவற்றை முறையாக பராமரிக்கும் படி வீட்டின் உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டனர்.

வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் முருகேசன் விவசாயத்திற்கு கூட்டுறவு சங்கத்தின் சேவைகள் குறித்துப் பேசினார்.

உயிரியல் முறையில் பூச்சிக்கட்டுப்பாடு குறித்து முனைவர் செ.சுகன்யா கண்ணா பேசினார்.



பெண்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் குறித்து மருத்துவர் அனுஷா மக்களிடம் கலந்துரையாடினர்.

இறுதியாக மகளிருக்கான கோலப்போட்டிகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன..