Search This Blog

Thursday, March 14, 2019

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

0 comments

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 12,546 பள்ளிகளச் சேர்ந்த 9 லட்சத்து 59,618 மாணவ, மாணவிகளும் 38,176 தனித்தேர்வர்களும் எழுதவுள்ளனர்.


சென்னை மாநகரில் 567 பள்ளிகளில் உள்ள 213 மையங்களில் 50,687 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அதைப்போல், புதுச்சேரியில் 302 பள்ளிகளில் உள்ள 48 மையங்களில் 16,697 பேர் தேர்வில் கலந்துகொள்கிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 3,731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர், கடலூர், சேலம்,கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, சென்னை புழல் ஆகிய மத்திய சிறைகளில் உள்ள 152 சிறைவாசிகள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய சிறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மையங்களில் தேர்வெழுதுகிறார்கள். தேர்வுப்பணியில் 49 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தேர்வறையில், ஆசிரியர்களும் செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது. தேர்வறைகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு உடந்தையாக இருக்கும், பள்ளி நிர்வாகத்தினர் மீதான நடவடிக்கையும் கடுமையாக இருக்கும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரையும் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரையும் நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 29-ஆம் தேதி முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் ஏப்.1-ஆம் தேதி தொடங்குகிறது.