Search This Blog

Tuesday, April 9, 2019

ஆசிரியர் கலந்தாய்வு: வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள்

0 comments
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 38,000-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2.4 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநில அளவில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, ஆண்டுதோறும் மே மாதத்தில் இணையதளம் வழியாக நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், நிகழ் கல்வியாண்டு வரும் 13-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஆனால், மக்களவைத் தேர்தல் வரும் 18-இல் நடைபெற இருப்பதால், அதுதொடர்பான பணிகளில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இப்போது ஈடுபட்டுள்ளனர்.அதேநேரம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படாதது, பல ஆண்டுகளாக பணி மாறுதலை எதிர்பார்த்து வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை கவலை அடையச் செய்தது.


இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மக்களவைத் தேர்தல் முடிந்தப் பின் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியாகும். மேலும், ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. எந்த முறைகேடுகளும் இன்றி இந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தப்படும்' என்றனர்.