Subscribe Us

Monday, September 2, 2019

'குரூப் - 4' தேர்வில் தவறான கேள்விகள்


'வி.ஏ.ஓ., உட்பட, 6,491 பணியிடங்களுக்கான, 'குரூப் - 4' தேர்வில், இரண்டு கேள்விகள், தவறாக கேட்கப்பட்டுள்ளது என, தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 4 தேர்வு, நேற்று, 3,000 மையங்களில் நடந்தது. இதில் பங்கேற்க, 16 லட்சத்து, 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில், 200 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. கேள்விகளுக்கு, தலா, ஒன்றரை மதிப்பெண் என, 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் என, இருமொழிகளிலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு விடைகள் தரப்பட்டு, சரியான விடையை தேர்வு செய்யும்படி அமைந்திருந்தது.நேற்றைய தேர்வில், 141வது கேள்வியாக, 'பொருத்துக' என்று கேட்கப்பட்டு, இருபுறமும், தலா, நான்கு குறிப்புகள் தரப்பட்டிருந்தன.இதில், ஒரு பக்கம், குடியரசு தினம் என, குறிப்பு தரப்பட்டிருந்தது. எதிர்பக்கம், ஜன., 26, 1950 என்கிற தேதியே தரப்படவில்லை. இதனால் தேர்வர்கள், குழப்பம் அடைந்தனர்.அதே போல், 158வது கேள்வியில், இந்திய அரசியலமைப்பின் எந்த விதி, அடிப்படை கடமைகள் குறித்து விளக்குகிறது என, கேட்கப்பட்டு, நான்கு பதில்கள் தரப்பட்டிருந்தன.

இதற்கு, '51 - ஏ' என்பது, சரியான விடை.ஆனால், இந்த கேள்வி, ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில், அடிப்படை கடமை என்பதற்கு பதில், அடிப்படை உரிமைகள் என, கேட்கப்பட்டுள்ளது.ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட அடிப்படை உரிமைக்கு, முதல், மூன்று பதில்களும் சரியானவை. எனவே, ஆங்கிலத்தில் பதிலளித்தவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த இரு கேள்விகளுக்கு விடையளித்த அனைவருக்கும், மதிப்பெண் வழங்க வேண்டும் என, தேர்வர்கள் கோரியுள்ளனர். - நமது நிருபர்

No comments:

Post a Comment

Popular Feed