Search This Blog

Thursday, October 31, 2019

மூன்று பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும்: பள்ளிக் கல்வித்துறை

0 comments
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் அரசு அறிவித்தது. இதற்காக அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 60 மதிப்பெண்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.



தொடர்ந்து மீதமிருக்கும் 40 மதிப்பெண்களுக்கு மூன்று பருவங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி எடுத்துக்கொள்ளப்படும் என்று தொடக்க கல்வி இயக்ககம் கூறியுள்ளது.
5ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து தேர்வு மையங்களை பொறுத்தவரையில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் பள்ளிகளில் கூடுதல் தேர்வு மையங்களையும், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



தேர்வு பணிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான மாவட்ட தேர்வு குழு கண்காணிக்கும் என்றும் தொடக்க கல்வி இயக்ககம் கூறியுள்ளது. பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி, முதல் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படாது என்பதையும் தொடக்க கல்வி இயக்ககம் சுட்டிக்காட்டியுள்ளது.