10ம் வகுப்பு பொதுத்தேர்வு உண்டு



சென்னை : ''பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அனைவருக்கும் தேர்ச்சி திட்டம் இல்லை. தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒரு மாதமாக கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. மார்ச், 27ல் துவங்கவிருந்த, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதனால், 10ம் வகுப்பு தேர்வு எப்போது நடக்கும் என, மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், '10ம் வகுப்பு தேர்வு ரத்தாகும்; அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட உள்ளது. 'கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்களில் மட்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது' என, சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து, ஆசிரியர் சங்கங்கள், பள்ளி நிர்வாகிகள், அரசியல் கட்சியினர், தங்கள் விருப்பங்களை அறிக்கையாக வெளியிட்டு வருகின்றனர். ஆனால், 'தேர்வு குறித்து, முதல்வர் முடிவு செய்வார்' என, பள்ளி கல்வி அமைச்சர், செங் கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்தார். இதுகுறித்த கேள்விக்கு, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று அளித்த பதில்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, மாணவர்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம்; தேர்வை எப்போது நடத்துவது என்பதை, பல்வேறு வகையில் பரிசீலித்து வருகிறோம். ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டதை போல, 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், தேர்ச்சி வழங்க முடியாது.பத்தாம் வகுப்பு தேர்ச்சியானது, அரசின் அனைத்து வகை பணிகளுக்கும், அடிப்படை கல்வியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும், அடுத்த கட்ட படிப்புக்கு செல்வதற்கான முக்கிய படிப்பாக உள்ளது. எனவே, எந்த மாணவர் எப்படி படிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள, 10ம் வகுப்பு தேர்வு அவசியம். தேர்வு குறித்து, உரிய நேரத்தில் அரசு அறிவிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel